ஒக்கூர் மாசாத்தியார் பாடல்களில் புலப்பாட்டுத் திறன்

ஒக்கூர் மாசாத்தியார் பாடல்களில் புலப்பாட்டுத் திறன்

முனைவர் ஆ.மணவழகன், இணைப் பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. 113

(செந்தமிழ்க் கல்லூரி (ம) செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், மதுரை, சனவரி 30, 2014)

ஒக்கூர் என்பது பாண்டி நாட்டில் திருக்கோட்டியூர்ப் பக்கத்தில் உள்ள ஓர் ஊர் என்கிறார் உ.வே.சா.

சிவகங்கையில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் உள்ளது ஒக்கூர். பாண்டிய மன்னர் காலத்தில் இந்த ஊரில் பிறந்து வாழ்ந்தவர் மாசாத்தியார்.

  இவர் பாடிய பாடல்கள் அகநானூற்றில் இரண்டும், குறுந்தொகையில் ஐந்தும், புறநானூற்றில் ஒன்றுமாக இடம் பெற்றுள்ளன.

  ஒக்கூரில் பிறந்ததால் இவர் ஒக்கூர் மாசாத்தியார் என அழைக்கப்பட்டார்.

ஓக்கூர் மாசாத்தியார் – பாடல்கள்

        குறுந்தொகை       –      05      (126,139,186,220, 275)

        அகநானூறு         –      02      (324, 384)

        புறநானூறு           –      01      (279)  

புலப்பாட்டுத் திறன்

  • கருத்தை –  உணர்த்துகிற / புலப்படுத்துகிற / கொண்டுசேர்க்கிற / முறைமை (அ) உத்தி
  • ஒவ்வொரு படைப்பாளனுக்கும் வேறுவேறான தன்மையில் அமைவது
  • படைப்பாளனின் தனித்தன்மையை வெளிப்படுத்தும் வாயிலாக அமைவது
  • மொழிப் புலமை, இலக்கிய ஆளுமை, பண்பாடு, வரலாற்றுப் புரிதல், சமூக நிகழ்வு, பல்துறை அறிவு, கனவு, கற்பனை, எதிர்ப்பார்ப்பு – அனைத்தையும் உள்ளடக்கியது.

காட்சிப் பின்புலம்

(நாடகம் – திரைப்படம்- பாடல்)

பெண் கவிஞர்களின் கவிதைகளில் தென்படும் செறிவான கற்பனைகளும், ஒலிநயம் மிகுந்த சொற்சேர்க்கைகளும் ஒரு சிறப்பான மொழி ஆளுமையையும் புரிதலையும் புலப்படுத்துபவை. ஒக்கூர் மாசாத்தியாரின் பின்வரும் அகநானூற்றுப் பாடலில் ஒரு முல்லை நிலக் காட்சியின் பின்புலத்தில் தலைவனின் தேர் செல்லும் வழி இவ்வாறு விவரிக்கப்படுகிறது.

தளிர் போன்ற தன்மையுடைய கிளி இனிதாய் வளர்ந்த இளைய குஞ்சின் சிறகைப்போல மழை வளர்த்த பசுமையான பயிரை உடைய காடு. அக்காட்டில் பறையின் கண்ணைப் போன்று விளங்கும் நீரால் நிறைந்த சுனைகளில் மழைபெய்வதால் உண்டான குமிழிகள் தாமரை மொட்டுகள் போலத் தோன்றி மறையும். கிளையினின்றும் காற்று உதிர்வதால் நீரின் மேல் கிடந்து அழகு செய்த வண்டுகள் தேனுண்ட அழகிய மலர்களைத் தேரின் ஆழி அறுத்துச் செல்லும். அந்த ஆழி குளிர்ந்த நிலத்தில் பிளந்துபோன சுவட்டில் ஒன்றன்பின் ஒன்றாய் வரிசையாய்ப் போகும் பாம்பைப் போல் நீர் விரைந்து செல்லும். முல்லை மலரும் மாலை நேரத்தில் நகரில் புகுவதை ஆராய்ந்து உணர்ந்து தலைவனின் தேர் செல்லும் என அக்காட்சி விரிகிறது.

விருந்து பெறுகுநள் போலும் திருந்து இழைத்

தட மென் பணைத் தோள் மட மொழி அரிவை

‘தளிர் இயல் கிள்ளை இனிதினின் எடுத்த

வளராப் பிள்ளைத் தூவி அன்ன

உளர் பெயல் வளர்த்த, பைம் பயிர்ப் புறவில்

பறைக்கண் அன்ன நிறைச்சுனை தோறும்

துளிபடு மொக்குள் துள்ளுவன சால

தொளிபொரு பொகுட்டுத் தோன்றுவன மாய

வளிசினை உதிர்த்தலின், வெறி கொள்பு தாஅய்

சிறற்சிறகு ஏய்ப்ப அறற்கண் வரித்த

வண்டுண் நறு வீ துமித்த நேமி

தண்நில மருங்கில் போழ்ந்த வழியுள்

நிரைசெல் பாம்பின் விரைபு நீர் முடுக

செல்லும், நெடுந்தகை தேரே

முல்லை மாலை நகர் புகல் ஆய்ந்தே (அகம். 324)

பின்புலம் – காட்சிப் படுத்துதல்

        1. தளிர் இயல் கிள்ளை இனிதினின் எடுத்த

        வளராப் பிள்ளைத் தூவி அன்ன               – காடு

        2. உளர் பெயல் வளர்த்த, பைம் பயிர்ப் புறவில்

        பறைக்கண் அன்ன        நிறைச்சுனை தோறும்

        துளிபடு மொக்குள் துள்ளுவன சால

        தொளிபொரு பொகுட்டுத் தோன்றுவன மாய – சுனை  

        நிகழ்வு – 1 – மழை பெய்தல்

        நிகழ்வு – 2. – வண்டுகள் தேன் குடித்தல்

        நிகழ்வு – 2 – காற்று வீசுதல்

        நிகழ்வு – 3 – நீரில் மலர் விழுதல்

        நிகழ்வு – 4 – தேர்ச்சக்கரம் அறுத்துச் செல்லுதல்

        நிகழ்வு – 5 – தேர்ச்சக்கர தடத்தில் பாம்பைப் போல நீர் செல்லுதல்

        பருவம் – கார்காலம்  

        செயல் – தலைவன் வினை முடித்துத் திரும்புதல்

        பிரிவு – போர் நிமித்தமாக

        தலைவி பண்பு – விருந்தோம்பல்

        தலைவன் பண்பு – நன்றி பாராட்டல் (பாகன்)      

        ’இருந்த வேந்தன் அருந் தொழில் முடித்தென

        புரிந்த காதலொடு பெருந் தேர் யானும்

        ஏறியது அறிந்தன்று அல்லது, வந்த

        ஆறு நனி அறிந்தன்றோ இலெனே; “தாஅய்

        முயல் பறழ் உகளும் முல்லை அம் புறவில்

        கவைக் கதிர் வரகின் சீறூர் ஆங்கண்

        மெல் இயல் அரிவை இல்வாயின் நிறீஇ

        இழிமின்” என்ற நின் மொழி மருண்டிசினே

        வான் வழங்கு இயற்கை வளி பூட்டினையோ?

        மான் உரு ஆக நின் மனம் பூட்டினையோ?

        உரைமதி –வாழியோ, வலவ!’- என, தன்

        வரை மருள் மார்பின் அளிப்பனன் முயங்கி

        மனைக் கொண்டு புக்கனன், நெடுந் தகை

        விருந்து ஏர் பெற்றனள், திருந்திழையோளே.(அகம்.384)

        செயல் – வினை மீள்தல்

        சூழலியல் – முல்லை நிலம்

“தாஅய்

முயல் பறழ் உகளும் முல்லை அம் புறவில்

                கவைக் கதிர் வரகின் சீறூர்

        நயம் – 1

        ஏறியது அறிந்தன்று அல்லது, வந்த

                ஆறு நனி அறிந்தன்றோ இலெனே;

        நயம் – 2

        வான் வழங்கு இயற்கை வளி பூட்டினையோ?

        மான் உரு ஆக நின் மனம் பூட்டினையோ?

        பண்பாடு  – விருந்து

                விருந்து ஏர் பெற்றனள், திருந்திழையோளே

பொருள்

        (11)  தேர்ப்பாகனே !

        (1-11) பாசறையில் இருந்த நம் மன்னன் அரிய போரை வெற்றியுடன் முடித்தான்.      விரும்பிய காதலுடன் ஏறி அமர்ந்ததே அல்லாமல் வந்த இயல்பை நன்கு அறியேன். முயற்குட்டிகள் தாவிக் குதிக்கும் முல்லையான அழகிய காட்டில்    கவர்த்த கதிரையுடைய வரகு பொருந்திய  ஊரில், மென்மைத் தன்மையுடைய      தலைவியின் வீட்டில் தேரை நிறுத்தி இறங்குக என்ற சொல்லைக் கேட்டு நான்        பெரிதும் வியப்பை அடைந்தேன். வானில் உலவும் காற்றைக் குதிரையின்         வடிவாய்ப் பூட்டி வந்தாயோ ! அல்லது உன் மனத்தை அவ்வாறு பூட்டி         வந்தாயோ! சொல்வாயாக எனக் கூறி.

        (13) பெருந்தன்மையுடய தலைவன்

        (11-13) தன் மலைபோன்ற மார்பில் அத்தேர்ப் பாகனைச் செறிப்பவனாய்த்      தழுவியபடி தனது இல்லத்தினுள் உடன் கொண்டு போனான்.

        (14) திருந்திய அணிகளையுடைய அவனுடைய தலைவி விருந்தோம்பும்      சிறப்பைப் பெற்றாள்.

குறுந்தொகை

                இளமை பாரார் வளநசைஇச் சென்றோர்

                இவணும் வாரா ரெவண ரோவெனப்

                பெயல்புறந் தந்த பூங்கொடி முல்லைத்

                தொகுமுகை யிலங்கெயி றாக

                நகுமே தோழி நறுத்தண் காரே. (குறு.126)

இளமையை கருதாராய்ச் செல்வத்தை விரும்பிச் சென்றார். இவ்விடத்தும் வந்திலர்; எவ்விடத்தினரோ? (அதனையும் உணரச் செய்திலர்) மழை பாதுகாத்த அழகிய கொடியையுடைய முல்லையின் கூட்டமான முகைகள் விளங்கும் பற்களாக, (அவர் சொல்லை மெய்யெனக் கொண்ட நம்மைப் பார்த்து) நகும், தோழி! நறுவிய குளிர்ந்த கார்காலம்.

        பருவம் – கார்காலம் தொடங்கியது (மழை) ; அதன் விளைவாக முல்லைக்   கொடிகள் முகைவிட்டன

        கருத்து – இளமை பாரார் வளநசைஇச் சென்றோர்

        இலக்கிய உத்தி – தற்குறிப்பேற்றம் – முல்லை மொட்டுகள் நகுகின்றன.

மேற்கண்ட பாடலைப் போன்ற கருத்தமைவு

                ஆர்கலி யேற்றோடு கார்தலை மணந்த

                கொல்லைப் புனத்த முல்லை முன்கொடி

                எயிறென முகைக்கு நாடற்குத்

                துயிறுறந் தனவாற் றோழியென் கண்ணே. (குறு.186)

இடியோடு வந்த கார்பருவத்தைக் கூடியனதால், புனத்திடத்தவான முல்லைக் கொடிகள், பல்லென்னும்படி அரும்பீனும்; (இக்கார்பருவத்தில்) தோழி! (கூறியவாறு வராத) நாடனைக் குறித்து எம்கண்கள் துயிலொழிந்திட்டன.

மன உணர்வைக் காட்சிப்படுத்துதல் / சூழல் பதிவு / மண்சார்ந்த உவமை

        (காட்டுப் பூனையை அஞ்சிப் பெட்டைக் கோழி தன் குஞ்சுகளை ஒருங்கு     சேர்க்கும் பொருட்டு அழைத்துக் கூவும் – அது போல அம்ம்பலோடு எம் தெருவிற்கு வராதே)

                மனையுறை கோழிக் குறுங்காற் பேடை

                வேலி வெருகின மாலை யுற்றெனப்

                புகுமிட னறியாது தொகுபுடன் குழீஇய

                பைதற் பிள்ளைக் கிளைபயிர்ந் தாஅங்

                இன்னாது இசைக்கும் அம்பலொடு

                வாரல் வாழிய ஐயவெந் தெருவே. (குறு.139)

        மனையிடத்து உறையும் கோழியின் குறுகிய காலையுடைய பேடை, வேலியிடத்து ஆண்பூனையால் மயக்கம் அடைந்ததனால், தப்பிப் புகுமிடத்தை அறியாது கூட்டத்துடன் சேர்ந்து, துயர்தரும் சிறிய சுற்றத்தை (குஞ்சுகளை) அழைக்கும் அழைப்புப்போல, இன்னததாய்க் கூறும் அம்பலோடு வாராதி; வாழ்வாயாக, ஐய! எமது தெரிவிடத்து.

        ஐ-தலைமை; அதனுடையவன், ஐயன்; அதன் அண்மை விளி “ஐய” என்பது. செற்றத்தால் “வாழியர்” என்றாள்.

மண்சார்ந்த உவமைகள்

                நாரை – பனங்கிழங்கு பிளந்தன்ன அலகுடை செங்கால்                                         அருகம்புல்; கன்றுக்குட்டி; முட்செடி;

                                பழமழைக் கலித்த புதுப்புன வரகின்

                இரலை மேய்ந்த குறைத்தலைப் பாவை

                இருவிசேர் மருங்கிற் பூத்த முல்லை

                வெருகுசிரித் தன்ன பசுவீ மென்பிணிக்

                குறுமுகை யவிழ்ந்த நறுமலர்ப் புறவின்

                வண்டுசூழ் மாலையும் வாரார்

                கண்டிசிற் றோழி பொருட்பிரிந் தோரே (குறு.220)

பழைய மழையினால் தழைத்த புனத்தில் உள்ள புதிய வரகினை, ஆண் மான் மேய்ந்தமையால் குறைதலை உடைய நுனியை, கதிர் அரிந்த தாள் சேர்க்கும் பக்கத்தில் மலர்ந்த முல்லைக் கொடியினது, காட்டுப் புனை சிரித்தால் போன்ற தோற்றத்தையுடைய செவ்விய பூவின் மெல்லிய பொதிதலை உடைய சிறிய அரும்புகள் நறிய மலர்கள் தோன்றிவிட்டன. வண்டுகள் அம்மலரை ஊடும் பொருட்டு சுற்றுகின்றன. மாலைக் காலத்திலும் வாராராயினார். இதனைக் கருதுவாயாக.

கிராமம் – தொழில் – பொருள்வயின் பிரிவு  

        (பசுக்கூட்டங்களின் மணி ஓசையோ? தலைவர் வரும் தேரின் மணி ஓசையோ?      முல்லைக் கொடி படர்ந்த கல் மீது ஏறி கண்டு வருக தோழி)

                 முல்லை யூர்ந்த கல்லுய ரேறிக்

                கண்டனம் வருகஞ் சென்மோ தோழி

                எல்லூர்ச் சேர்தரும் ஏறுடை யினத்துப்

                புல்லார் நல்லான் பூண்மணி கொல்லோ

                செய்வினை முடித்த செம்ம லுள்ளமொடு

                வல்வில் இளையார் பக்கம் போற்ற

                ஈர்மணற் காட்டாறு வரூஉம்

                தேர்மணிகொல் ஆண்டு இயம்பிய உளவே குறு.275)

ஊரைச் சேரும் ஆனின் மணிகொல்? செய்தொழில் முற்றிய உள்ளத்தோடு காளையர் காக்கக் காட்டாற்றில் வரும் தலைமகன் தேர்மணிகொல்? ஆங்கு ஒலித்தவை உள்ளன; (ஆதலின்) தோழி! கல்லின் உயர்ந்தவிடத்தில் ஏறிக் கண்டுவரச் செல்வமோ?

        உணவிற்காகப் பிறவுயிர்கட்குக் கேடுசெய்யாது புல்லை ஆர்ந்து இனிய பாலைத்தருவது ஆனின் நல்லியல்பு, ‘புல்லார்நல்லான்’ என்றதனாற் புலனாயிற்று.     

போர்க்களத்தை நோக்கிச் செல்லுமாறு ஏவினள் 

        வாகை; மூதின் முல்லை

கெடுக சிந்தை ; கடிதுஇவள் துணிவே;
மூதின் மகளிர் ஆதல் தகுமே;
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை,
யானை எறிந்து, களத்துஒழிந் தன்னே;
நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன்,
பெருநிரை விலக்கி, ஆண்டுப்பட் டனனே;
இன்றும் செருப்பறை கேட்டு, விருப்புற்று மயங்கி,
வேல்கைக் கொடுத்து, வெளிதுவிரித்து உடீஇப்,
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி,
ஒருமகன் அல்லது இல்லோள்,
‘செருமுக நோக்கிச் செல்க’ என’ விடுமே!

  • ஒக்கூர் மாசாத்தியார், புறம்.278

புலப்பாட்டுத் திறம்

  • எளிய மொழி நடை
  • உரையாடல் தன்மை (பேசிக்கொள்ளுதல்)
  • சிறப்பான பின்புலக் காட்சி அமைப்பு
  • மண்சார்ந்த உவமைகள்
  • சூழல் பதிவு

        * குறுந்தொகை 5 பாடல்களில் 4 இல் முல்லைக்கொடி                              கருப்பொருளாதல்

admin

ஆய்வாளர், பேராசிரியர், சமூகவியல், கலை (ம) பண்பாட்டுப் புலம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

1 comment

  • ஐயா வாழ்த்துக்கள் நல்ல சீரிய புதுமையான ஆக்கப்பூர்வமான பணி .தங்களுக்கும் விவேகானந்த கோபால் ஐயா அவர்களுக்கும் வாழ்த்துக்கள்

error: Content is protected !!